தளபதி படத்தில் ஜெய்சங்கர் ஏற்று நடித்தப் பாத்திரம் நினைவிருக்கிறதா! இன்று வரை அப்படி ஒரு நபரை நாம் பார்க்க இயலாத வகையில் நல்லவர், தியாகச் செம்மல். அதிர்ந்து கூட பேசாத பாத்திரம். போலவே அவ்வளவு பெரிய அதிர்ச்சியை சுமந்து, உள்வாங்கிக்கொண்டு மனைவிக்குப் பரிந்து பேசும் பாத்திரம் அது. தீவிர கமல் இரசிகர்களின் நிலையும் சற்று ஏறக்குறைய அதுதான். தளபதிக்கு எதிரே குணா வந்த பொழுது ஜெய்சங்கர் போல்தான் நின்றிருந்தார்கள் ஊர் மந்தையின் கமல் ரசிகர் மன்ற அண்ணன்கள். இதோ இப்போது நாங்கள் நிற்கிறோமே, தக் லைஃப் வெளியான நாளில், அப்படி.
பொதுவாக, படம் குறித்து எதுவுமே பேசமாட்டார்,மணி. படம்தான் பேசவேண்டும் என்பதைக்கூட பேசி விளக்காமல் பென்சிலால் எழுதி வைத்து விடுபவர் என்றே இருந்த காலங்கள் போய் எங்கு திரும்பினாலும் அவருடைய பேட்டிகள், பொன்னியின் செல்வனில் இருந்தே இப்படித்தான். அதைவிட வியத்தகு மாற்றம், மொத்த ரிவ்யூ கூட்டத்தினரையும் ஓரிடத்தில் கூட்டி விருந்து வைத்தது.
இப்படி எல்லாமே தலைகீழ் என்றாலும் மாறாமல் இருந்தது எனில் அது, கமல் மட்டும்தான். அதே பேச்சு. விரிவான நீண்ட விளக்கங்கள். வானத்தின் கீழ் இருக்கும் அத்துணை குறித்தும் ஆழ்ந்த அலசல்கள் என மிக அற்புதமான பேட்டிகள், உரைகள். கர்நாடக மாநிலம் கொடுத்த அல்லல்கள், தேவையற்ற அழுத்தங்கள் என எதற்கும் அஞ்சாமல், தன் நிலையில் இருந்து இறங்காமல், மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை எனும் நியாயத்தின் படி கேட்காமல் இருந்த அசல் ‘தக் லைஃப்’ கமல்.
நாயகன் படத்தில் போலிஸை சாராய பாட்டிலால் தலையில் அடிக்கும் காட்சி. கமல் அமெரிக்காவில் இருந்து வரும்பொழுது ‘சுகர் பாட்டில்’ என, சர்க்கரையால் செய்யப்பட்ட, பார்ப்பதற்கு கண்ணாடி போல் இருக்கும் பாட்டிலை வாங்கி வந்ததை, அந்தக் காட்சியில் பயன்படுத்திய விதத்தை மணிரத்னம் வியப்போடு விளக்கி இருப்பார். (பரத்வாஜ் ரங்கன் புத்தகம்) குறிப்பாக, பாட்டிலால் அடித்துவிட்ட பிறகு கமல் கொடுக்கும் ரியாக்ஷன், உண்மையிலேயே கண்ணாடி கிழித்துவிட்டது போன்ற முகபாவனை கை உதறல் என கமல் அதை வேறு தளத்திற்கு உயர்த்தி இருப்பார் என்று அந்த உரையாடலில் வியந்து சொல்லி இருப்பார், மணி.
இது ஓர் எளிய உதாரணம் தான். இப்படி நாயகன் படம் நெடுக இருவரும் இணைந்து நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். அது அதன் இடத்தைக் கொண்டதும் அவற்றின் பொருட்டுதான். நான் முன்பு குறிப்பிட்டதுபோல், தமிழ் மக்களின் ரசனை மகத்தானது, இங்கு ஒரே ஒரு சிறந்த படைப்பைக் கொடுத்துவிட்டால் போதும். புயலிலே ஒரு தோனி என்ற ஒரே நாவல் தான் இன்று வரை ப.சிங்காரத்தைக் கொண்டாடாத இலக்கியம் இல்லை, போலவே சுப்ரமணியபுரம் என்ற ஒரே ஓர் அற்புதத்திற்காக இன்றுவரை நம் மனதின் நெருக்கத்தில் இருப்பவர் சசி.
அப்படித்தான் நாயகன், அப்படித்தான் மணி-கமல் கூட்டணி.
தக் லைஃப் பார்த்த முதல் நாளில் நான் உட்பட கமலின் கலை நேர்த்தியை நேசிக்கும் அனைவரும் அடைந்த பதற்றமும் புலம்பிய சொற்களும் சமூக வலைத்தளங்களில் கொட்டிக்கிடந்ததன் காரணமும் அதுதான். ‘ஆதங்கம்’, இன்னும் நேர்த்தியாக, இன்னும் நன்றாக வந்திருக்கலாமே என்ற மனக்குமுறல்.
இப்போது ஆற அமர அமர்ந்து இந்த ’அமர் ஹே’ யை யோசித்துப்பார்த்தால், இன்றைய காலகட்டத்தின் பாய்ச்சல் எனப்படும் வெப் சீரிஸ்களின் இன்னொரு வடிவம் எனத் தோன்றுகிறது இந்த தக் லைஃப். இந்தப் படத்தை எட்டு எபிசோடுகளாகப் பிரித்து ஆனால் ஒட்டுமொத்தமாக binge-watch செய்திருந்தோம் என்றால் இதுவும் பாதாள் லோக், மிர்சாபூர் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடும். திரையில் நாயகனின் தொடர்ச்சியைப் பார்க்க நினைத்த மனங்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் இது வெப் சீரிஸாக வந்திருந்தால் ஏற்பட்டிருக்காது. ஆம், நாயகனில் சரண்யாவின் பாத்திரத்தை இரண்டாகப் பிரித்து அபிராமி, த்ரிஷா என மாற்றிய சூட்சமம் எல்லாம் வெப் சீரிஸ் வகைக்கானது.
முதல் பாதியில் நாடக மேடையை ஓரளவு சரியாகவே செட் செய்திருந்தார்கள். ஆனால் தில்லியில் எப்படி கமல் தாதாவாக முடிசூடினார், சூடிய பின்னர் செய்யும் செயல்கள் என இரண்டிலும் ஒவ்வொரு காட்சியைத் தீர்க்கமாக வைக்காதது சறுக்கல் தான். மீண்டும் நாயகனை இழுத்தோம் எனில், இந்த இரண்டும் கச்சிதமாக அமர்ந்திருக்கும். பொறுத்துப்போகும் வேலு, தன் வாப்பாவை காவல் நிலையத்தில் வைத்துக் கொன்ற இன்ஸ்பெக்டரை கொல்வதில் எழுச்சி. நாயக்கராக மாறிய பிறகு ஐ.ஜிக்கு உதவுவது என இலக்கண சுத்தமாக நிகழ்த்தி இருப்பார்கள் தந்தைக்கடவுளை.
தனக்கான இடத்தை வேறு ஒருவர் வந்து நிரப்பும்போது ஏற்படும் மன உளைச்சல் வெறுப்பாக மாறி வன்மமாக உருவெடுக்கும் ‘ஒத்தல்லோ ’வின் கீற்று தான் கதைக்களம் எனில் அதை இன்னும் ஆழமாக கடத்தப்பட்டிருக்க வேண்டிய இரண்டாம் பாதியை, உணர்வுக் குவியலாக மாற்றியதன் விளைவுதான் அத்தனை எதிர்மறை அலைகளுக்குக் காரணம் என்று தோன்றுகிறது. இதே கதைக்களம், காட்சிகள் ஆனால் மிகச்சிறியதான மாற்றங்கள் இருந்திருந்தால் தக் லைஃப் கொண்டாடப்பட்டிருக்கும்.
மீண்டும் நாயகன். அர்சனாவை அந்த அறையில் அப்படி சந்திக்க நேரிடும் காட்சி. சமீபத்தில் கூட (பத்தாண்டு முன்பு என்பது சமீபம் எனில்) அந்தக் காட்சியை அங்குலம் அங்குலமாக, இசைக்கோர்ப்பு, ஒளி அமைப்பு, அந்தக் கட்டில், அதன் எதிரே இருந்த கண்ணாடியில் பிம்பம், கதவைத் திறக்கும் போது பாய்ந்து வரும் வெளிச்சக் கத்தை என விளக்கி மகிழ்ந்த காணொளி உலா வந்தது நினைவிருக்கும். அப்படியான சந்திப்புதான் த்ரிஷாவுடனான ஒன்று. ஆனால் மிகத் தட்டையான காட்சியாக அமைந்துபோனதால் அதன்பிறகு வந்த அவர்களுடைய காட்சிகளோ, பிளவோ எடுபடவில்லை அல்லது நகைப்புரியதானது.
அதே ஒத்தல்லோவை ஓம்காரா என்ற அட்டகாசமான படமாக ஹிந்தியில் எடுத்திருப்பார் விஷால் பரத்வாஜ். சயீஃப் அலிகான் மீதுதான் படம் ஆரம்பித்து முடியும். சிம்புவின் பாத்திரம். ஓம்காராவில் இருக்கும் பாத்திர வார்ப்பு இங்கு இல்லாது போனதுதான் அழுத்தம் ஏற்படுத்தாததன் முக்கியக் காரணியாகப் பட்டது.
பிறகு, பாடல்கள். நாயகன் படத்தில் பாடல்கள் ஒரு பாத்திரமாகவே வந்தன. ஆம். ஒவ்வொரு பாடல் முடியும்பொழுதும் பத்தாண்டுகால வாழ்க்கையின் அடுத்தக் கட்டம் என்பதுபோல் காலமாற்றத்திற்குப் பயன்பட்டிருக்கும். இங்கு முத்த மழை பாடலே இடம்பெறவில்லை என்பது ஒருபக்கம் எனில் விண்வெளி நாயகாவிற்கு அவ்வளவு இடம் இருந்தும் இடக்கையால் தள்ளிவிட்டார்களே எனத் தோன்றியது. இடைவேளைக்குப் பிறகு இரயிலில் கமல் வாய்ஸ் ஓவரில் தான் பயின்ற தற்காப்புக்கலை குறித்த விளக்கத்தை, காட்சியாகப் பாடலாக மேலெழவைக்கக்கூடிய அத்தனை சாத்தியங்களும் விண்வெளி நாயகாவிற்கு இருந்தது.
இப்படி வெற்றிக்கு அருகில் இருந்தவற்றை அலுப்பும் சோம்பலுமாகத் தட்டிவிட்டுவிட்டதால் ஏற்பட்ட மனக்குமுறல்தான் இரசிகர்களுக்கு.
மற்றபடி, கமல் மீது அளவற்ற வன்மத்தை வெளிப்படுத்த இதை ஒரு காரணமாகக் கொண்டு கிண்டலும் கேலியுமாக அணுகும் ஆட்களுக்குக் கமலைத் தெரியாது என்று நகர்ந்துவிடுதலே நலம். ஏனெனில் கமல்ஹாசனைத் தெரியாதவர்களுக்குக் கலைத்தன்மையைக் குறித்துக் கிஞ்சித்தும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்ற மமதை கமல் இரசிகர்களுக்கு எப்போதும் உண்டு, இப்போதும்.
மக்களுக்காகத் தான் (நாலு பேர் நன்றாக இருப்பதற்கு தான்) போலீஸ் , சேட்டு என்று பலரை எதிர்க்க துணிகிறான் நாயகன். படிப்படியாக தலைவனுமாகிறான்
ஆனால் இங்கு நான் பிறந்தது முதலே அப்படி என்னை முத்திரை குத்தி விட்டார்கள், thug ஆகிவிட்டேன் என்று தட்டையான விளக்கம்.
பார்க்க கூடாத இடத்தில் படிப்பில் அக்கறையுள்ள நாயகியை பார்த்தவுடன் அவளை மீட்டு விட மாட்டாரா என்று நாம் எண்ணத் தொடங்கி விடுகிறோம்.
ஆனால் இங்கு அதுவும் மொக்கையான காட்சியாகவே கடக்கிறது.அதிலும் திரிஷா கேரக்டருக்கு அபிராமியிடம் கொடுக்கும் அடடே விளக்கம்…!!
சிம்புவிடம் உயிராக இருப்பது பின் திடீரென சந்தேகப்படுவது , அதையே சிம்பு கேரக்டரும் செய்வது எல்லாம் திருப்பங்கள் என நினைத்திருந்தால் வெரி சாரி…
நாயகன் மற்றும் பழைய gangster பட கேரக்டர்கள் எல்லாத்தையும் சீட்டு கட்டாக கலைத்து போட்டு ரம்மியே சேர்க்காமல் ஏமாற்றி declare செய்து விட்டார்கள்.
பின் குறிப்பு. நான் நாயகன் படத்தை எண்ணற்ற முறைகள் பார்த்து இரசித்தவன்