Homeகட்டுரைகள்Temba Bavuma : காலத்தின் தூதுவன்

Temba Bavuma : காலத்தின் தூதுவன்

“Hope is a good thing, may be the best of things. And no good thing ever dies” – ஆம், Shawshank Redemption படத்தில் வரும் வரிகள் தான். படம் வந்த ஆண்டு 1994. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 1992ல் இதே தென்னாப்பிரிக்க அணி ஒரு பந்தில் 22 ரன்கள் எடுக்க வேண்டும் என்று தொலைக்காட்சித் திரையில் ஒளிர்ந்தபோது வீரர்கள் மட்டும் அல்ல, பார்த்துக்கொண்டிருந்த அனைவருக்குமே ‘இதென்ன கூத்து’ எனும் சினமும் அதிர்ச்சியும் ஏற்பட்டது. கேட்டால் அதுதான் ‘Duckworth-Lewis Method’ என்றார்கள். அன்று திரையில் தென்பட்ட அனைத்து தென்னாப்ரிக்க வீரர்களின் முகங்களும் அதில் தெரிந்த விரக்தியும் இன்னும் நினைவில் இருக்கக் கூடும். 13 பந்துகளில் 22 ரன்கள் என்பதை எளிதாக எடுத்துவிடமுடியும் என்ற நம்பிக்கையோடு இருந்த பொழுது, இப்படி ஒரு விதியைக் காரணம் காட்டி ஒட்டுமொத்த நம்பிக்கையும் தகர்க்கப்பட்டிருந்தது. அதுவும் ஏறத்தாழ 22 வருடங்கள் கிரிக்கெட்டில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு நாடு, ஓர் அணி, மீண்டும் வந்து மீண்டெழுந்து அரை இறுதி வரை முன்னேறி இருந்தது அனைவரையுமே அவர்கள் பக்கம் ஈர்த்திருந்தது. ஆலன் டோனால்ட்டின் அந்த கன்னத்து க்ரீம் மீசையும் அதிவேக ஓட்டமும் என ஏராளமான ’இரசிகர்களுக்கான நொடிகளாக’ நிகழ்ந்தேறின. இப்படி, ரசிகர்களின் மனம் கவர்ந்த அணி சட்டெனெ ஒரு பந்தில் 22 ரன்கள் எனும் கற்பனையில் கூட எட்டமுடியாத இலக்கை நிர்ணயத்ததன் மூலம் மிகப்பெரிய துரோகத்தை அந்த அணிக்கு நிகழ்த்தியதாகவே ரசிகர்கள் பார்த்தார்கள். அதன்பொருட்டு, அன்றில் இருந்து இன்று வரை தென்னாப்பிரிக்க அணி என்றாலே மனதில் ஓரத்தில் ஒரு சிறு பிடித்தம், இவர்கள் வெல்ல வேண்டும் எனும் கிடக்கு இருந்து கொண்டே இருக்கிறது.

பொதுவாக, ஆஸ்திரேலிய அணி தோற்றதைத்தான் அந்த அணியைப் பிடிக்காத பெரும்பான்மை கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதாகக் கொண்டாடுவார்கள். இம்முறை அப்படி நிகழவில்லை. ஆம். தென்னாப்பிரிக்கா வென்றதுதான் பிரதானமாகக் கொண்டாடப்படுகிறது ரசிக மனங்களில். மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் ஒருசேரக் கலந்த கொண்டாட்ட மனநிலையை உணர முடிகிறது. இரசிகர்களின் பகிர்வில் இருக்கும் பதிவுகளில் இடம்பெற்ற பெயர் ‘பவுமா’.

ஆம்,

Temba Bavuma என்ற பெயரைத்தான் கிரிக்கெட் ரசிகர்கள் நேற்றிலிருந்து உச்சரித்துக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் தாங்களே வென்றுவிட்ட உணர்வு. தெம்பா என்றால் நம்பிக்கை என அவருடைய பாட்டி இப்பெயரை வைத்ததாகக் கூறுகிறார் பவுமா. நாட்டினருக்கே நம்பிக்கை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் பெயராக அதை மாற்றவும் செய்திருக்கிறார், பவுமா.

தொடர்ந்து ஒடுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு வரும் ஒருவரை, இனத்தை அவர்களுக்கு நேரும் அவமானங்களை இந்த உலகம் பார்த்துக்கொண்டே இருக்கும். ஏனெனில் என்றேனும் வெல்லும் போது உடன் நிற்பதைத்தவிர இந்த உலகத்திற்கு வேறு வழி இல்லை என்பதை அறிந்தே காலம் அந்தக் கணத்திற்குக் காத்திருக்கும். அப்படித்தான் ஒட்டுமொத்த உலகமும் பவுமா மற்றும் தென்னாப்பிரிக்க அணியோடு உடன் நிற்கிறது. மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டே இருக்கிறது. தானே வெற்றிப்பெற்றுவிட்ட உணர்வோடு வலம் வருகிறது.

இந்த வெற்றி ஒருபோதும் பவுமா போன்ற வீரர்களை தடுமாறச் செய்யாது. ஏனெனில் இது தோல்வியாக ஆகி இருந்தால் அதற்குத் தன் மூதாதைகளில் துவங்கி அத்தனை அத்தனை ஆண்டுகால முன்னகர்வுகள் மொத்தமும் கேள்விக்கும் கேலிக்கும் ஆட்படுத்தப்படும் என்பது பவுமாவிற்குத் தெரியும். அதனால்தான் பவுமாக்கள் வெற்றிக்காக ஆடுவதில்லை. தோற்றுவிடக்கூடாது எனும் உத்வேகம் மட்டும்தான் மனம் முழுக்க நிரம்பி இருக்கும். ஏனெனில் விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்பதெல்லாம் பவுமாக்களுக்கு இல்லை என்பது அவருக்குத் தெரியும். தான் கேப்டனாக ஆடிய டெஸ்ட் ஆட்டங்களில் இதுவரை தோல்வியைத் தழுவியதில்லை என்பது நம்மைப் பொறுத்தவரை புள்ளிவிவரக் கணக்கு. அவருக்கு அப்படி அல்ல. வெற்றி என்பது மட்டுமே ஆயுதம் என்று நினைத்ததாலோ என்னவோ, கோப்பையை வாங்கியதும் துப்பாக்கியை இயக்குவதுபோல் செய்துகாட்டினார். களத்தில் முன் நின்று சமர் புரியும் மகத்தான வீரனின் பதில் தாக்குதல் அது.

இத்தனை ஆண்டுகளாக இறுதி ஆட்டங்கள் வரை முன்னேறி முன்னேறிக் கோட்டை விடுகிறதே என்று ரசிகமனம் பரிதாபப்பட்ட ‘chockers team’ இன்று லார்ட்ஸ் மைதானத்தின் முகப்பில் வெற்றிக்களிப்பில் நிற்கும் இந்தக் காட்சி, வரலாற்றில் பதியப்படும். அந்த வரலாற்றை எழுதியவராக பவுமா நினைக்கப்படுவார். ஏனெனில் காலம் எவ்வளவு கருணையற்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு கருணை மிக்கது. கனிந்து நிற்பது.

தந்தையர் தினத்தில் காணக்கிடைத்த அற்புதமானப் புகைப்படம் இது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இவ்வகை