சங்க இலக்கியம் சலிக்கச் சலிக்கப் பருக வேண்டும் போல் தான் உள்ளது. சங்க இலக்கியச் சொற்களும், பொருள்களும், விளக்கங்களும், பாடலோடு பொருந்திப் போகிற தற்கால, கடந்தகால நிகழ்வுகளும் தொன்மை வாய்ந்த இலக்கியம் அன்று மட்டுமல்ல இன்றும் என்றும் என்றென்றும் வாழ்வியல் நூல்கள் தான் இவை என என்பதற்குத் தக்க சான்று தான் “காஃபி வித் கபிலர்”
பூவிடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
காதலின் ஆழத்தை உணர்த்தும் நெய்தல் திணைப்பாடல்
தலைப்பாக…
குறுந்தொகைப் பாடல்கள் இயற்றிய சங்க காலப் புலவர்களான கபிலர், வெள்ளிவீதியார், மோசிகீரனார் நன்னாகையார், சிறைக்குடி ஆந்தையார் என இந்தக்கால Gen-Z குழந்தைகள், இளைஞர்கள் தமிழ் என்றாலே தலை தெறிக்க ஓடும் நிலையில், சுவாரசியமாக தற்காலக் காதல், பிரிவு, சோகம், நினைந்தவர் புலம்பல், பசலை, என இத்தலைமுறை நிகழ்வுகளை சங்கப் பாடல்களை ஒப்பிட்டு காதலின் நம்பிக்கை, வேண்டுதல், பிரிதல்,எனக்
கட்டுரைகளாக…
நூல் வாசிக்கும் ஒவ்வொருவரையும் தமிழின் சிறப்புகளையும் குறுந்தொகைப் பாடல்களையும் கொண்டு சேர்க்கும் வண்ணமாக கலகலப்பான நிகழ்வுகளோடும், உணர்வுப் பூர்வமான கதைகளோடும் இலக்கிய ஒப்புமை செய்துள்ள எழுத்தாளர் நர்சிம் அவர்களுக்குப் பாராட்டுகள் பல.
சமகால எழுத்தாளர்களில் கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர் என இளம் தலைமுறை வாசகர்களையும் தன் வசப்படுத்தித் தமிழ் உள்ள இடமெல்லாம் காஃபி வித் கபிலரை திடம், மணம், சுவை எனப் பருக வைத்துள்ளார்.
தெறூஉம் தெய்வம், அளியள், முலையிடைப் பள்ளம் பெருங்குளம் ஆனதே ,மாயச் செலவு, அறத்தோடு நிற்றல், உகிர்நுதி என 17 தலைப்புகளில் தான் சந்தித்த அனுபவங்களையும் மனிதர்களையும் கொண்டு குறுந்தொகைப் பாடல்களோடு நாம் கடந்து வந்த பல நிகழ்வுகளைத் திரும்பிப் பார்க்க வைக்கிறார்.
ஒரு சிறிய விரிசலுக்குக் காத்திருந்த மதகின் மடைநீர்போல நர்சிம்மின் பேனா இவர் விரல் பிடிக்கக் காட்டருவியாய்ப் பாய்கிறது.
மு.செந்தாமரை
எழுத்தாளர்.

